
(வி.எம்.சாமி)
பினாங்கு தீவில் பாரம்பரிய சின்னமாக விளங்கிவரும் ரிக்ஷா சைக்கிள்களுக்கு பிரத்தியேக வழித்தடங்கள் மற்றும் அதனை ஒருங்கிணைந்த நிலைக்கு மாற்றும் வகையில் ஒரு ஆய்வு செய்யப்பட்டு வருவதாக பினாங்கு தீவு நகர மேயர் டத்தோ ஏ.ராஜேந்திரன் தெரிவித்தார்.
குறிப்பாக சம்பந்தப்பட்ட ரிக்ஷா சைக்கிள் ஓட்டிகள் சுற்றுப் பயணிகளை ஏற்றிச் செல்லும் போது அந்த ரிக்ஷா சைக்கிள்கள் பிரதான சாலையில் மெதுவாக செல்லும் போதும், எதிராக செல்லும் போதும் பலவிதமான சிக்கல்கள் ஏற்படுகின்றன.
எனவே சம்பந்தப்பட்ட ரிக்ஷா ஓட்டுனர்களின் நலனை பாதுகாக்கும் பொருட்டு ஒரு புதிய முறையான பாதுகாப்பு நடைமுறையுடன் இயங்குவதற்கான ஒருமுகப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டி உள்ளதாக அவர் நகர மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு இதனை பினாங்கு தீவு நகரமன்ற மேயர் டத்தோ ஏ.ராஜேந்திரன் குறிப்பிட்டார்.
பினாங்கு தீவின் சுற்றுலா மற்றும் கலாச்சாரம் பாரம்பரியத்தின் முக்கிய பங்களிப்பாக இருந்து வருவது ரிக்ஷா சைக்கிள்கள். சம்பந்தப்பட்ட ரிக்ஷா ஓட்டிகளின் நிலையான வருமானம் அத்துடன் முறையான பாதுகாப்பு போன்ற நலனை பாதுகாப்பது மாநில அரசு உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் முன்னெடுத்து வருவதாக டத்தோ ஏ.ராஜேந்திரன் கூறினார்.
